Thursday, December 30, 2021

 புதுக்கவிதை தொகுப்பு 

 ( நானும் புதுக்கவிதை எழுதினால் என்னவென்று முயற்சி செய்தபோது!)


1             அறிவை எனக்கருள் 

  உன்னை வணங்கினால் அருள்வாய் 

     என்றறிவேன் ஆண்டவனே - ஆனால்

     உன்னை வணங்கும் அறிவை எனக்கருள்!

                                                   ------

2.                                   மேகம்              16-07-1983

நீல வானத்தின் நிர்வானத்தை - நின்

கருப்பு ஆடையால் மூட முடியாமல் நீ

வடிப்பது தான் மழைக்கண்ணீரோ?

                                                -----

3.                                   மாறிய காலம்            16-07-1983

காலம் மாறிவிட்டது - ஆம்

பாருங்கள்

பலர்முன்னே வெட்கமின்றி தன்

மலைக்காதலனை தழுவி நிற்கின்றாள்

இந்த கார்மேகப்பெண்!

நாணத்தால் முகம் சிவக்கும் என்பார்கள் - ஆனால்

இவளுக்கு ஏன் முகம் கருக்கிறது?  ஆம்

காலம் மாறிவிட்டது!

                                             ----------

4.                              அதிருஷ்டசாலி              05-08-1983

அழகிய பெண்ணே !

காதலிக்கிறேன் என்றேன்!

அவளோ

அண்ணி அதிர்ஷ்டசாலி என்றாள்!

                                                   -------

5.                                                    கடன்           13-02-1984

பெண்ணே

உனக்கு கடன் வாங்கித்தான் பழக்கமா?

மானிடம் கண்ணைப்பெற்றாய் 

தேனைப்போல் குரலைபெற்றாய்

குயிலிடம் குரலைபெற்றாய்

மயிலிடம் சாயல் பெற்றாய்

இன்று

என் இதயத்தையும் கேட்கிறாயே !

உனக்கு கடன் வாங்கித்தான் பழக்கமா?

                                                    ------

6                                                  .வசந்த வாழ்வு   22-03-1984

ஆண்டவா

என் வாழ்வு முழுவதும் 

பூஞ்சோலையாக்க நான் வேண்டவில்லை

ஆனால்

ஒருசில வசந்தங்களையேனும் கொடு!

ஆனால்

வசந்ததிலேயே வாழ்வு முடியட்டும்!

                                                      -------                                   

7.    பெண்ணே

உன் கண்கள் என்ன 

நட்சத்திரங்களோ என

ஐயுற்றேன் 

பிறகு தான் தெளிந்தேன்

முழு நிலவுக்குள்

ஏது

நட்சத்திரமென்று?


பெண்ணே

எல்லோரும் உனைப்பார்த்து

கவிதை படைக்கின்றனரே

அவர்கள் கவிஞர்களா? 

இல்லை! இல்லை!

வெறும் காப்பி(copy ) அடிப்பவர்கள்!

ஏனென்றால்

நீயே ஒரு கவிதை தானே!

                                                             ---------

8                                       தனிமை              04-07-1984

தனிமையே !

உன் 

கொடுமை உனக்கெப்படி 

தெரியும்?

நீதான்

எப்போதும் என்னுடனே

இருக்கிறாயே!

                                      ----------

9.                                                     பசலை                 05-10-1985

சங்க கால நாயகிக்கு

கைவளை 

நழுவியது பசலை நோயால்!

ஆனால்

என்னவளுக்கோ நான் அருகிருக்கும்போதே!

காரணம் கேட்டால்,

கண் இமைக்கிறாளாம்!




 









 


 

                                      வேகத்தில் வருவாயே!         05-12-97  

( written after SHE went to her mom's place for second delivery )


காணவில்லையே என்னை கடந்தசில நாட்களாய் !

கவனமுடனே நீதான் கவர்ந்தே சென்றாயோ?


நானிருக்கவில்லை நானாகவென்றும்

நீ பிரிந்து என்னை நீங்கியே சென்றவுடன்!


கல்லாக மனம் மாறி கண்ணே நீ சென்றவுடன்

மரமாக நான் மாறி துடுப்பிழந்து அலைகின்றேன்!


அலைகடல் போல் மனமே தான் ஆடித்தான் தீர்த்தாலும்

கற்கண்டாம் உன்நினைவே கலங்கரை விளக்காகும்!


உன்னையே எனக்களித்து தாரமாயானாய் நீ

ஆனாலும் எனைப்பேணி தாயுமாகி நின்றாய் நீ!


உலர்மணலில் ஈரம் போல் உற்றதோழியானாய் நீ

காலமெல்லாம் எனக்கெனவே காதலியாய் இருப்பவளே!


கடன்தீர்க்க நான் முயலும் கடுமுயற்சி பலித்திடவே

கண்ணே என் மகளாய் கணமேனும் இருப்பாயோ?  


ஒன்று இரண்டெனவே ஒவ்வொன்றாய் ஈன்றாலும்

தலைமகனாம் என்னைத்தான் தவிக்கவே விடுவாயோ?


நித்திரையிலுனைப் பார்த்து நித்தமும் தலையணையை 

தழுவியவென் தவிப்பை தங்கமே அறிவாயோ?


மோகத்தில் எனையாழ்த்தி தாகத்தில் தவிக்க விட்டாய்

தேகத்தால் எனைசேர வேகத்தில் வருவாயே! 


                                            யாராக நான் மாற?     14-04-1991


இளங்கொடியாய் நான் மாற நினைத்திடுவேன் - நீ

இதமுடனே தென்றலென வருவதென்றால்!


மாமலையாய் நான் மாற முனைந்திடுவேன் - நீ

முத்தமிட முகிலெனவே வருவதென்றால்!


கானகமாய் நான் மாற கருதிடுவேன் - நீ

கவிபாட கருங்குயிலாய் வருவதென்றால்!


கடல்மணலாய் நான் மாறிக் கலந்திடுவேன் - நீ

தள்ளாடி வெள்ளலையாய் விழுவதென்றால்!


சிற்பமென மாறிடவே சிந்தைகொள்வேன் - நீ

செதுக்கிடவே சிற்றுளியாய் வருவதென்றால்!


ஓவியமாய் நான் மாறி ஓய்ந்திருப்பேன் - நீ

வடிவமைக்கத் தூரிகையாய் வருவதென்றால்!


கண்ணகத்தே கண்மணியாய் மாறிடுவேன் - நீ

அணைப்பதற்கு இமையெனவே இருப்பதென்றால்!


நானாக நானிருந்து நலம்பெறுவேன் - நீ

நயமுடனே அருகிருக்க இசைந்துவிட்டால்!   

                                                          எங் ''கள்''  தமிழகம்   03-05-1985


சாதியில்லை சமயமில்லை

சண்டைச் சச்சரவில்லை

போதிமரம் எங்களிடம் 

தெருவுக்கு நாலுண்டென

சாதிக்கும் அரசினது

சாதனைதான் என்னேடா?

நாதியற்று நடுத்தெருவில் 

நிற்போரை காப்போமென்று

போதைரசம் புகட்டிவிட்டு 

புதுமைகளை செய்யுதடா! 

சாதிசமயப் பெயராலே 

சண்டை மலிந்து போச்சுதடா!

சாதியேது! சமயமேது!

எதிலுமிங்கு பேதமில்லை!

பாதியிலே சாதியையும்

பணமிருந்தால் மாற்றிடலாம்!

நாதியற்றோர் பெயர்சொல்லி

நியதியெல்லாம் மீறிடலாம்!

நீதியின் பெயராலே

நிதிகள் பல திரட்டிவிட்டு

பாதிக்கு மேல் சாப்பிடலாம்!

மீதிக்கும் யார் வருவார்?

போதிமரம் எங்கேடா?

வேதநெறி எங்கேடா?

போதை தரும் மதுரசமே 

போதி (த) மரம் ஆனதடா!

புகன்றவன் வாய்வழியே 

வருவதெல்லாம் வேதமடா!

சந்தேகம் தீர்ந்ததடா

சாதனை என்னவென்று

நன்றாக புரிந்ததடா

எங் 'கள்' தமிழகத்திலே!

                                                 மன்னவனும் எங்கேயடி       10-06-1983


பார்த்த கண் பார்த்திருக்க - பாவை

நானும் காத்திருக்க

சேர்ந்தவனை காணோமடி - தோழி

சென்றவிடம் அறியேனடி! 


மாலையிருள் மண்டிவிட - விண்

மீன்களவை  வந்துவிட 

சந்திரனைக் காணோமடி - தோழி

மன்னவனும் எங்கேயடி!


கைப்பிடித்து அன்புடனே - நாண்

கழுத்திலேற்றி மணந்தவென்னை

கண்கலங்க வைத்தானடி -  எங்கே 

மனம் மயங்கி நின்றானோடி?


காளையவன் சன்னதியில் - மனம்

களிப்பெய்தும் மங்கையென்னை 

காப்பாற்ற வருவானோடி - தோழி

கண்துடைக்க மாட்டானோடி !


துன்பம் மிகப்பெருக - உளம்

துடிதுடிக்க கலங்குமெந்தன் 

துயர் தீர்க்க வாரானோடி - தோழி

தூது சென்று பாராயோடி?

                                          அமைதியின் தவிப்பு       25-02-1983


நீலக்கடலினிலே நின்றன் முகம் பார்ப்பதினால்

நிலையற்ற வாழ்வினிலே நிம்மதியை தேடுகின்றேன்!


காலைக் காற்றிலுந்தன் காதல் மொழி கேட்பதினால் 

காலம் முழுவதும் யான் கவிதையுளம் நாடுகின்றேன்!


மேலைச் செவ்வானில் சிவந்தமுகம் தோன்றுவதால்

மாலை வரும்முன்னே மனம்மயங்கி தேடுகின்றேன்!


கோலவிழியிரண்டும் குளிர்நிலவாய் காய்வதினால்

மாலைமங்கியிருள் மண்டிவரத் தவிக்கின்றேன்!


ஞால முழுவதிலும் நங்கையுனை காண்பதினால்

சீலம் மறந்தொழுகி சிந்தைநிலை கலங்குகின்றேன்!


வாலைப் பருவமதில் வஞ்சியுனைக் கண்டதினால்

வேலைச் சுழிக்காற்றில் துளியாகித் துடிக்கிறேன்!     

                                                 எதுவழகோ           20-10-1980


காலைக் கதிரவன் பொன்னொளியில்

களிப்பாய் மலரும் தாமரையோ !


காளை அவன் முகம் கண்டவுடன்

கனிந்து சிவந்த நின் முகமோ?


மாலைக் காற்றின் இதமுடனே

காலைத் தழுவிடும் வெள்ளலையோ !


சேலை துவள நடை பழகும்

சேயிழை உந்தன் நடையழகோ?


முள்ளின் துணையில் ரோஜாவோ!

முல்லை போன்ற நின் சிரிப்போ?


கங்கையினழகோ காவிரியழகோ

மங்கையுனது உடலழகோ?  


இருண்ட வானின் கார்முகிலோ

சுருண்ட குழலுடை பெண்மயிலோ!


மருண்ட விழியுடை மானினமோ!

செறிந்த பொருளுடை நின்விழியோ?


பற்றுக்கொம்பில் பூங்கொடியோ

கற்புக்கரசி தேவதையோ?


சந்தம் சிறந்த கவிதைகளோ

சாந்தம் தவழும் புவிமகளோ?


முத்தோ மணியோ மரகதமோ

அச்சோ ! அறியேன் எதுவழகோ?