Friday, December 5, 2014

என்றும் நான் பூஜ்ஜியமே


நானும் ஐம்பதென்று
நாட்காட்டி உணர்த்தியது
நரையும் வழுக்கையுமே
நற்சான்று கூறியது.

ஐந்தினை பெற்றிட்டு
எண்பதினை கடந்தாலும்
எந்தைக்கும் எந்தாய்க்கும்
என்றைக்கும் நானைந்து.

ஒருத்தியின் மகனெனவே
நானிருந்த காலம் போய்
இருவர் சேர்ந்திங்கு
எனை காக்கும் நேரமிது

என் மகனை ஈன்றவளே
எனக்கும் தாயானாள்
தோளுயர்ந்த பிள்ளைகளும்
தோழராய் தெரிகின்றார்.

அரைசதமே ஆனாலும்
ஆசைகள் விடுவதில்லை
முறைவைத்து எனையிழுக்க
அவைகளும் தயங்கவில்லை.

நாட்கணக்கை கூட்டிவிட்டு
நானடைந்த அரைசதமும்
நாளைக்கே வரப்போகும்
நூறாண்டும் பயனில்லை

ஐந்திலே வளையாதது
ஐம்பதிலே வளையுமா
ஐந்திலே விளையாதது
ஐம்பதிலே விளையுமா

வளைப்பதும் நானல்ல
வளைவதும் நானல்ல
விளைப்பதும் நானல்ல
விளைவதும் எனதல்ல

ஐந்தும் நானல்ல
ஐம்பதுவும் நானல்ல
எதுவும் சதமல்ல
எவையும் எனதல்ல

உள்மூச்சும் வெளிமூச்சும்
உணர்த்தியதோ உடல் வயதை
உள்ளிருக்கும் உத்தமனை
உணர்த்துவோர் யாரிங்கே

சீவனை சிவனாக்கும்
சீரிய முயற்சியிலே
என்னை எனக்குணர்த்த
என் குருவை சரணடைந்தேன்

மாயைதனை விலக்கிவிட்டு
மனமடங்கும் காலம் வரை
ஏதுநான் செய்திடினும்
என்றும் நான் பூஜ்ஜியமே