Thursday, March 8, 2018

This Poem is dedicated to all the women in my life, who played their part to make me as I am today.... Happy women's Day to all my women friends.. 
கண் காது மூக்கும் கைகளும் கால்களும்
அமையும் முன்பே எனைத் தாங்கி
கூன் குருடு செவிடு பேடு நீங்கி நான் பிறக்க
கருவறையின் இருட்டினிலே காத்தவளும் பெண்ணொருத்தி!
கருவறையை நான்தாண்டி தரணிக்கே தான் வந்து
தரையிலே விழும் முன்பே தாங்கியதும் பெண்ணொருத்தி!
பிஞ்சுநடை காலத்தில் தள்ளாடி நான் விழவே
கொஞ்சுமொழி பேசியே எனை எழுப்பியதும் பெண்ணொருத்தி!
பள்ளிப் பருவத்திலே பலர் போற்ற எனைமாற்றி
பாங்குடனே பாடம் பல புகட்டியதும் பெண்ணொருத்தி!
என்னுலகின் முதல் ஆணாம் எந்தையை காட்டியதும்
என்னையும் ஆண்மகனாய் உலகிற்கு உணர்த்தியதும்
ஆதிமுதல் அந்தம்வரை இடைப்பட்ட காலமெல்லாம்
பெண்ணின்றி வாழ்வில்லை பெண்மைக்கு நிகரில்லை!
சக்தியின்றி சிவமில்லை! சிவமின்றி அவளில்லை!
நாணயத்தின் இருபுறம் போல் இருவரின்றி வேறில்லை!
ஆண்மையைப் பெற்று நீயும் அர்த்தநாரி ஆவதற்கு
அர்த்தமுள்ள நாரியாய் அகிலத்தில் வலம்வருவாய்!
பெண்ணிற்கு பலபெருமை பெண்மையில் தானன்றி
ஆணுக்கு இணையான ஆண்மையில் வருவதில்லை!
பெண்மையென்றாலது தாய்மை! பெண்மையென்றாலது மென்மை!
பெண்மையென்றாலது இனிமை! பெண்மையென்றாலது முழுமை!
பெண்மையை கொண்டாட நாளொன்று ஏனிங்கு?
முழுமையுற்ற பெண்மைக்கு முழுவருடம் போதாது!