Thursday, August 19, 2010

Manam oru Kurangu ---- written on 22nd February 1986

இது இருபத்தி நான்கு  வருடங்களுக்கு முன்னால் நான் எழுதியது.
ஆனால் இன்றைய கால கட்டத்துக்கும் இது ஒத்து வருவதால் மின் வலை மூலம் இதை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.

மனம் ஒரு குரங்கு.

மனம் ஒரு குரங்கு ! எத்தனை பொருத்தமான, சத்தியமான வார்த்தை.  குரங்கு என்பது ஏளனத்துக்காக சொல்லப்பட்டதல்ல. அதன் செயலுக்காகவே சொல்லப்பட்டது.  இன்றைக்கு ஒன்றை நினைக்கும் மனது அதனையே நாளை மறுக்கிறது.  மீண்டும் பிறகு ஏற்கிறது. எனவே மனத்தை வைத்து நான் செயல்களை ஏற்பதில்லை. இன்றைக்கு ஒருவர் பிடிக்காமல் போகலாம்.  ஆனால் மீண்டும் மனம் எப்போதாவது அவரை நாடி விழையும்.  இப்போது நாம் அவரை பகைத்து கொண்டால், அப்போது அவருடன் நாம் பேச மனம் இடம் கொடாது.  நம்முடைய ( ego) "தான்" என்ற உணர்வு தடுக்கின்றது.  ஆனால் அவருடன் பேசி உறவாடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய நற்பலன்கள் பயனற்று விடுகின்றன. மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது. தான் முன்பு செய்த அவசர செயலை எண்ணி தன்னை வருத்தி நொந்து கொள்கிறது. இப்போது நாமாக போனால் அவமானப் படுத்தப் படுவோம் என்று அஞ்சுகின்றது. அமைதியில்லாமல் போகின்றது. எல்லாவற்றுக்கும் காரணம் மனம் அலை பாய்வது தான். மனம் எப்போதும் ஒருவருடன் பகைமை உறவாடுவதில்லை. சில சமயம் நண்பரும் எரிச்சலூட்டுவதுண்டு.  என்னை எரிச்சளூட்டுவதர்க்குரிய உரிமையையும் நானே அவர்களுக்கு அளித்தேன் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் சிறிய சந்தோஷத்தையும் உணரக் கூடிய மனப் பக்குவம் எனக்கு இன்னும் வளர வேண்டும்.

அமைதியில் / தனிமையில்  மனம் சிந்திக்கின்றது. தனது பழைய செயலை நினைத்து அலசியிருக்கிறது. இது அனைவருக்கும் தேவையான ஒன்று. கடந்ததை எண்ணி வருத்தப் படாதே என்பர். ஆனால் கடந்த பாதையே வாழ்வில் நமக்கு படிப்பினை கற்று தர போகிறது. இனி கடக்கப் போவதற்கு அதுவே வழி காட்டி.

அழகு முகத்தில் நிச்சயமாக இல்லை.  மனத்தில் தான் இருக்கிறது. இதனை சிறிய வயதிலேயே அறிந்து கொண்டதினால் தானோ என்னவோ, என்னால் காதல் போன்றவற்றை முகத்தையும் உடலையும் வைத்து தீர்மானிக்க முடியவில்லை. இன்று என்னுடன் பேசும் அழகான பெண் என்னை அவமதித்து வார்த்தைகளால் நோகடிக்கும் போது அவளது அழகான முகம் மறைந்து மனத்தின் குரூரம் வெளிப்படுகிறது.  இதனை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

ஆணோ பெண்ணோ அவர்களது அழகு நம்முடைய மனதில் தான் இருக்கிறது. நமது மனதுக்கு அவர்களை பிடித்துப் போனால்  அவர்கள் தான் அழகின் இலக்கணம் என்கிறோம். பிடிக்காவிடில் தூக்கி எறிகிறோம்.  கொஞ்சம் யோசித்துப் பார்க்கும் போது எல்லோருமே அழகாயிருப்பதாகப் படுகிறது.  ஆனால் எல்லாருமே எல்லா சமயங்களிலும் அழகாயிருப்பதில்லை. மனமே முன்னின்று ஒரு செயலை செய்யும் போது மனிதர்கள் அழகனவர்களாகத் தெரிகின்றனர். நமது மனதுக்கு இதமளிப்பவர்கள் , நம்முடைய குறைகளை காது குடுத்துக் கேட்பவர்கள், நமக்கு ஆறுதல் கூறுபவர்கள் எல்லோரும் அந்தந்த சமயங்களில் அழகாக தெரிகிறார்கள்.  இது சுயநலமாகப் படலாம்.  ஆனால் சற்று யோசித்து பாருங்கள்.  பெற்ற தாய்க்கு தனக்குப் பிறந்ததெல்லாம் அழகு தான். அவளால் அவைல்களை வேறு படுத்த முடியாது.  எல்லாவற்றிலும் தன்னழகு சேர்ந்திருப்பதாக அவள் நினைக்கிறாள். அவள் மனம் அப்படி.  பிள்ளைகள் வயதான காலத்திலும் தங்களது தாயின் அழகை கண்டு சந்தோஷமடைகின்றன. அழகுக்கு வயதில்லை.  அதற்கு வரம்பில்லை. ஆனால் ஆசைக்கு தான் வரம்பு உண்டு.  ஆசையும் மனதில் தான் உண்டாகிறது.

குழந்தை ஒன்று பொம்மை வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நியாயப்படுத்தப்படுகிறது.  இளமையில் பெண்ணையும் திருமணத்தையும்  நாடினால் அதுவும் நியாயப் படுத்தப் படுகிறது.  ஆனால் 20 வயது இளைஞன் விளையாட பொம்மை கேட்டால் உலகம் அவனை கேலி செய்யும்.  வயதான மனிதன் பெண்களை நாடி சுற்றினால் உலகம் அவனை பழிக்கும்.  ஆசையின் வரம்பு வயதுக்கேட்ட்றபடி மாறுபடுகிறது.  ஆனால் அழகுக்கு வரம்பில்லை.  அது எங்கும் இருக்கிறது.  ஆசை, அழகு இரண்டுமே உண்டாவது மனதில் தான் என்றாலும் அவை வேறுபடுகின்றன.

இருந்தாலும், அழகான பொருளை அடைய ஆசையும், ஆசை காரணமாக அது மேலும் அழகாகவும் தெரிகிறது.

உற்றுப் பாருங்கள்.  சிறு எறும்பு நகர்வது கூட அழகாகத் தான் தெரியும்.  எல்லாமே அழகாக தெரிபவனுக்கு கவலைகள் குறைகின்றன.  மனம் அமைதி அதிகப் படுகின்றது.  தனிமை குறைகின்றது.  நட்பு வலுக்கின்றது.  பிறர் செய்யும் தவறில் அவர்களுக்கு பாடம் உண்டாகட்டும், நாம் உணர்ந்தது போல அவர்களும் அழகை அனுபவித்து அறியட்டும் என்ற எண்ணம் வளர்கிறது.

கோபாலகிருஷ்ணன் VS.   22.02.1986




1 comment:

  1. true words and nice post..:) felt difficult to read tamil:p..but i managed..:)keep gng i ll be a consistent reviewer here..:)

    ReplyDelete