Monday, February 7, 2011

My Trip to Ancient temples in Vellore and Krishnagiri Districts

அன்புள்ள நண்பர்களே,

என்னுடைய திருக்கோயிலூர் பயணத்துக்கு பிறகு நாங்கள் நீண்ட நாட்களாக நினைத்திருந்த வேப்பனப்பள்ளி ராமர் கோயிலுக்கு போக ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைந்தது.

ராஜு மாமா ஒரு நாள் என்னிடம் திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி என்னும் கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலுக்கு போக வேண்டும் என்றும் அப்படியே வேப்பனப்பள்ளி கோயிலுக்கும் போகலாம் என்றும் கூறினார்.  அதன் படியே நாங்கள் ( ராஜு மாமா, நான், சாந்தி, ரஞ்சனி மாமி ) பெப்ரவரி 2 ம் தேதி பயணப் படுவதாக முடிவு செய்தோம்.

வழக்கம் போல காலை 5.30 க்கு கிளம்ப முடிவு செய்து 6 மணிக்கு கிளம்பினோம்.  வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு டிராபிக் நிறைய இருந்ததால் மெதுவாக தான் செல்ல வேண்டியிருந்தது. சென்னை பெங்களூர் சாலையில் வண்டி வழுக்கிக் கொண்டு சென்றது... காலை பனியை சுகமாக அனுபவித்துக் கொண்டு ஒரு ஆனந்தமான பயணம். 220 km  கடந்து காலை மணி 8.45 க்கு திருப்பத்தூர்  வந்தடைந்தோம்.

திருப்பத்தூர் முதல் சாலைகள் படு மோசமாக இருந்தது எங்கள் பயணத்துக்கு சற்றே இடையூறாக இருந்தது.  எங்கள் வேகம் மிகவும் தடைப்பட்டது.  கொரட்டி கிராமத்தில் மலர் மற்றும் மாலைகள் கிடைப்பது அரிது என்று முன்னரே எங்களுக்கு தகவல் இருந்ததால் திருப்பத்தூரிலேயே மாலைகளை  வாங்கிக்கொண்டோம்.

கொரட்டி.

திருப்பத்தூரை சுற்றி மிகவும் பழமையான 10 சிவன் கோவில்கள் 10 கிராமங்களில் அமைந்திருப்பதால் தான் அந்த ஊருக்கு  திரு  "பத்தூர்"  என்று பெயர் வந்ததாக அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.  அப்படி அமைந்த 10 கிராமங்களில் ஒன்று தான் கொரட்டி என்பது.  நாங்கள் கொரட்டி பயணம் மேற்கொண்டதற்கு மிகவும் முக்கியமான காரணம் அங்கு அமைந்திருக்கும் பால சக்தி மனோன்மணி தான்.  பாலா திரிபுர சுந்தரி ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்ற எங்கள் எண்ணமும் தேடுதலும் கோரட்டியில் முடிவடைந்தது.  கார்த்தி மூலமாக கோரட்டியில் அமைந்துள்ள பாலாவை பற்றி அறிந்து இந்த பயணம் மேற்கொண்டோம்.

கொரட்டி திருப்பத்தூரில் இருந்து 8 km தொலைவில் திருப்பத்தூர் சேலம் சாலையில் உள்ளது.  இறைவனை அடைய மிகவும் கஷ்டம், பொறுமை, விடா முயற்சி ஆகியவை வேண்டும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அந்த 8 km சாலை மிகவும் மோசமாக இருந்தது.  20 km  வேகத்துக்கு மேல் எங்களால் போக முடிய வில்லை.  கொரட்டி சென்று அடைய மணி 10  ஆகி விட்டது.

கொரட்டி ஒரு மிகவும் சிறிய கிராமம்.  பிரதான சாலையில் இருந்து பார்த்தாலே உள்ளிருக்கும் கோயில் கோபுரம் தெரிகிறது. கோயிலுக்கு இரண்டு வாயில்கள் இருக்கிறது... பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. நாங்கள் உள்ளே சென்று பார்க்கும் போது கோயிலின் உள்ளே சிவனையும் அம்பாளையும் தவிர எங்களை வரவேற்க யாருமே இல்லை.  கார்த்திக்கு தெரிந்த கோயில் குருக்கள் ( வெங்கட்ராமன் ) எங்கிருக்கிறார் என்று தேடி கொண்டு கிழக்கு வாசல் அருகே உள்ள அவரது வீட்டுக்கே சென்று கூட்டி வந்தோம்.

அந்த சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அந்த சிவன் கோயில் மிகவும் பெரியதாக அமைந்துள்ளது.  வெங்கட்ராமன் குருக்கள் கோயிலைப் பற்றி  மிகவும் மனமுவந்து பல நல்ல தகவல்களை கூறினார்.

                                                          கிழக்கு வாசல்
        

ராஜ கோபுரத்தின் அருகே ராஜு மாமா , ரஞ்சனி மாமி மற்றும் சாந்தி


                                               கொரட்டி காளத்தி நாதர் சன்னதி

இங்கிருக்கும் ஈஸ்வரன் காளத்திநாதர் என்றே அழைக்கப்படுகிறார்.  அம்பாள் ஞான ப்ரசூனாம்பாள்.  ஆமாம்.  இந்த கோயிலையும் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலையும் ஓரே சமயத்தில் தான் அமைத்தார்கள் என்று வெங்கட்ராமன் குருக்கள் கூறினார்.  இங்கிருக்கும் சிவன் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறார்.   எனவே இங்கிருக்கும் சிவ லிங்கத்துக்கும் ஆவுடையார் இடது பக்கம் தான் இருக்கிறது. ( நாம் முன்பு அரன்கண்டநல்லூரில் பார்த்தது போல ) இங்கிருக்கும்  சிவனுடைய சாந்நித்தியமும், சக்தியும் மிகவும் அதிகமாக அமைந்திருப்பதாக ராஜு மாமா கூறினார்.  நான் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் மாமா சந்நிதானத்துக்கு எதிரே அமர்ந்து தினத்தில் ஈடுபட்டார்.   சிவன் சன்னதியில் வெளியே வடக்கு நோக்கி பாலா சக்தி மனோன்மணி அமைந்திருக்கிறாள்.  இங்கு பாலா சக்தி அமைந்தது ஒரு தனி கதை.

இந்த கொரட்டி கிராமம் சற்றே பிரபலம் அடைந்திருப்பது ஒரு கிருஸ்துவ அன்பரால் தான் என்றால் உங்களுக்கு சற்று ஆச்சர்யமாகவே இருக்கும். திரு  வின்சென்ட் அமல்ராஜ் திருப்பத்தூரில் ஆசிரியராக இருக்கிறார்.  அவர் பல சித்தர்கள் பாடல்களுக்கு பொருள் எழுதி நூல்களை வெளியிட்டு ஒரு சிவ பக்தனாகவே ஆகிவிட்டாராம். ஒரு நாள் அவரது கனவில் அம்பாள் ஒரு சிறு பெண் வடிவில் தோன்றி தான் பாலா சக்தி என்றும் தன்னுடைய பெயர் மனோன்மணி என்றும் கூறி தன்னை வடிவமைத்து கோரட்டியில் உள்ள சிவன் கோயிலில் அமைக்குமாறு கூறினாளாம்.  வின்சென்ட் அவர்கள் தன்னுடைய கனவில் கண்ட உருவத்தை ( குளித்து விட்டு ஈரமான தலையுடன் பச்சை நிற ஆடையுடன் கையில் சிவ லிங்கத்துடன் கூடிய தோற்றம் ) தன்னுடைய முஸ்லிம் அன்பரிடம் விவரித்து அவரை கொண்டு ஒரு படம் வரைந்து வைத்திருக்கிறார்.  பின்னர் அந்த படத்தை பார்த்து பாலா சக்தியின் விக்ரகம் அமைத்துள்ளார்கள்.  விக்ரக பிரதிஷ்டை நடந்து 11 வருடங்கள் முடிந்து விட்டது.  இன்றும் இங்கு செவ்வாய் கிழமைகளில் திரு வின்சென்ட் தலைமையில்  வார வழி பாடு நடை பெறுவதாக வெங்கட்ராமன் கூறினார்.
       திரு வின்சென்ட் அமல்ராஜ் கனவில் தோன்றிய உருவ படத்துடன் பாலா விக்ரகம்.
                                          

                                       கையில் சிவ லிங்கத்துடன் பால சக்தி மனோன்மணி


இங்கிருக்கும் பாலாவிடம் மனமுருகி வேண்டி கொள்ளும் வேண்டுதல்கள் எல்லாம் உடனே நிறைவேறுவதாகவும் வெங்கட்ராமன் கூறினார்.  பாலாவின் எதிரே அமர்ந்து சாந்தி அபிராமி பதிகம் பாடினாள்.

இங்கிருக்கும் அம்பாள் ஞான ப்ரசூனம்பாள் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.
                                                          ஞான ப்ரசூனாம்பாள்


இன்னொரு முக்கியமான விசேஷம் என்ன என்றால், இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.  அருணகிரி நாதர் இங்கிருக்கும் முருகனை பற்றி 2 பாடல்களை இயற்றி உள்ளார்.  ( திருப்புகழில் 903 மற்றும்  904 ஆவது பாடல்கள் )



  இங்குள்ள முருகனை பாடிய பின்னரே அவர் திருவண்ணாமலை சென்று முக்தி அடைந்ததாக வரலாறு.

                                            வள்ளி தேவானையுடன் கூடிய ஆறுமுகன்

இங்குள்ள முருகன் விக்ரகம் மிகவும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.  மொத்த விக்ரகமும் வேல் தோற்றத்தில் பன்னிரு கண்ணும் பவள செவ்வாயுடனும், ஆறிரு திண்புயத்துடன் அபய, வரதத்துடன் மீதமுள்ள  10 கைகளிலும் 10 ஆயுதங்கள் தாங்கி மயில் மேல் அமர்ந்து காட்சி தருகிறார்.  அவருக்கு இரு புறங்களிலும் வள்ளியும் தேவானையும் அழகுற அமைந்திருக்கிறார்கள்   மயில் சிற்பமும் அதன் வாயில் இருக்கும் பாம்பின் உருவமும் மிகவும் தெளிவாக வடிவமைக்க பட்டு இருக்கிறது.
                            வேல் தோற்றத்தில் அமைந்த 12 கைகளோடு கூடிய ஆறுமுகன்

இங்கு ஸ்தல விருக்ஷம் வில்வம்.  வில்வ மரத்தின் அடியே நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.  சப்த கன்னிகைகள், பைரவர் சந்நிதிகள் தனி தனியே அமைந்திருக்கிறது.   திருமூலர் சன்னதி ஒன்றும் திரு வின்சென்ட் அமல்ராஜ் அவர்களால் அமைக்க பட்டதாக கூறப்படுகிறது.
                                                        ஸ்தல விருக்ஷம்   வில்வம்     
          
                                                              சப்த கன்னிகையர்


ராஜ கோபுரத்தின் உள் பக்கம் பல சித்திரங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன... ஆனால் சரியான முறையில் பராமரிக்காததால் அவை அழியும் தருவாயில் இருக்கின்றன.
                             ராஜ கோபுர கூரையில் உள்ள பழமையான ஓவியங்கள்







 இந்த கோயில் அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும்,  வருவாய் இல்லாததால் வழக்கம் போல புறக்கணிக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாகவே இருக்கிறது.   திரு வின்சென்ட் அமல்ராஜ் அவர்களது முயற்சியினாலும் மற்றும் பாலா சக்தி மனோன்மணி வார வழிபாட்டு பக்தர்களாலுமே இந்த கோயில் ஓரளவு பராமனிக்க படுகிறது.  வருமானம் வரும் கோயில்கள் போல  அரசின் கட்டுபாட்டின் கீழ் வந்து கழகங்களின் கண்மணிகள் கைவரிசையை காணாமல் இந்த கோயில் அமைதியாக இந்த கிராமத்தில் இருக்கிறது.

நாங்கள் மேலும் சில கோயில்களை பார்த்து விட்டு அன்று இரவே சென்னை திரும்ப முடிவு செய்த காரணத்தால் நாங்கள் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று.
                                                      வெங்கட்ராம குருக்கள்

திரு வெங்கட்ராமன் 11  தலைமுறைகளாக அவர்கள் குடும்பம் கோயிலில் குருக்களாக இருப்பதாக கூறினார்.  இந்த தொன்மையான கோயிலில் சிவனையும் அம்பாளையும் கட்டி காக்க அவருக்கு அரசு தரும் சம்பளம் ரூ. 60 மட்டுமே.  நாளொன்றுக்கு அல்ல.  மாத சம்பளமே அவ்வளவு தான்.   அவரது இல்லம் கோயிலின் கிழக்கு வாசல் அருகே இருக்கிறது.  சிவனுக்கு வைத்திருந்த காணிக்கையை சிவனடியாருக்கு ( திரு வெங்கட்ராமன் அவர்களுக்கு ) கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
 
ஆண்டவனை நோக்கி செல்லுவது தான் கடினம் ஆனால் அவன் தரிசனம் கிடைத்த பின் எல்லா விஷயங்களும் நமக்கு சுலபமாகி விடுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் வழியில்  ஒருவர் எங்களுக்கு வேறு ஒரு வழியை காண்பித்து ஆதியூர் என்ற கிராமத்தின் வழியாக செல்லும்,படியும் சாலைகள் நன்றாக இருபதாகவும் கூறினார்.  அந்த செய்தி எங்களை விட என்னுடைய இன்னோவா காருக்கு வயிற்றில் பாலை வார்த்தார் போல இருந்திருக்கும்... ஏனென்றால் திருப்பத்தூரில் இருந்து கொரட்டி வரும் வழி மிகவும் மோசமானதாக இருந்ததால் நிச்சயமாக என்னுடைய காருக்கு வாய் இருந்தால் அழுதிருக்கும்.

ஆதியூர் வழியாக வெகு விரைவில் கிருஷ்ணகிரி சாலையை அடைந்தோம்.  நல்ல சாலை எனவே வண்டியும் நல்ல வேகம் எடுத்து 12 மணிக்குள் வேப்பனப்பள்ளி சென்றடைய எண்ணினோம். கந்திலி, பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி சென்று ஹோசூர் செல்லும் சாலையில் வேப்பனபள்ளி செல்லும் பாதைக்கு செல்ல வேண்டும்.  கந்திலியை கடந்து செல்லும் சமயம், நாங்கள் கடந்து வந்த காலமும் நினைவுக்கு வந்தது.  விடுமுறை நாட்களில் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பேருந்து பயணத்தின் போது கந்திலியில் முறுக்கு வாங்கி சாப்பிட்டது ஞாபகம் வந்தது.  திருப்பத்தூரில் ஏறியவுடன் எப்போது கந்திலி வரும் என்று காத்திருந்த காலம் அது.  கந்திலி முறுக்கு என்பது அந்த காலத்தில் அவ்வளவு பிரசித்தம்.  ஆனால் இப்போது யாரையும் பார்க்க முடியவில்லை. அப்போது முறுக்கு விற்றவர்களின் பையன்களும் பேரன் பேத்திகளும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு TCS, CTS என்று போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பர்கூர் சிறிய ஊராக இருந்தாலும் நன்றாக இருந்தது.  பழைய முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்ட இடம்.  பெயரை காப்பாற்ற வேண்டி பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.  ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோல சிறு கிராமங்களில்
பெருந்தலைவர்கள் போட்டியிட்டாலே எல்லா கிராமங்களும் முன்னேறி விடும்.

வேப்பனபள்ளி

சரியாக 12.30 க்கு வேப்பன பள்ளி வந்து சேர்ந்தோம்.  அது கொரட்டியை விட சிறிய கிராமம்.  அந்த கிராமத்தின் நடுவே அமைந்தது தான் ராமர் கோயில்.  வேப்பன பள்ளி கிருஷ்ணகிரி கோலார் செல்லும் பாதையில் தமிழ் நாட்டின் எல்லையோர கிராமம்.  தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மூன்றும் சந்திக்கும் இடத்தில உள்ளது.  இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தெலுங்கு கலந்த தமிழ் பேசுகிறார்கள்.  எதிர்பார்த்த படியே கோயில் மூடி இருந்தது.  ஆனால் சிறிய கிராமம் என்பதால் குருக்களை வீட்டிலிருந்து அழைத்து வருவது மிகவும் எளிதானது.   நாங்கள் சென்று பத்து நிமிடங்களுக்கெல்லாம் ஒருவர் சென்று குருக்களை அழைத்து வந்தார்.  வீட்டிலிருந்து கூட்டி  வரப்பட்டதால் முகம் சுளிக்காமல் வந்த குருக்கள் உற்சாகத்துடனும் காணப்பட்டார்.  எங்களுக்காகவே அப்போது கோயில் திறக்கப்பட்டு உச்சி கால பூஜை நடத்தப்பட்டது.

 அப்போது எனக்கு நானும் ராஜு மாமாவும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மடிப்பாக்கம் பெருமாள் கோயில் சென்றது ஞாபகம் வந்தது.  மடிப்பாக்கம் கோயிலுக்கு நாங்கள் செல்லும் போது மணி சரியாக 10.30 .  கோயில் மூடும் நேரம் தான்.  நாங்கள் உள்ளே வருவது தெரிந்தும் சிரித்துக்கொண்டே  அந்த கோயிலின் பட்டர் சந்நிதானத்தை மூடினது இன்றும் மறக்க வில்லை. அவர் இரண்டு நிமிடம் காத்திருந்தாலும் நாங்கள் பெருமாளை தரிசித்து இருப்போம்.  ஆனால் எங்களுக்கு அன்று சாமி வரம் குடுக்க காத்திருந்தாலும் பூசாரி தடுத்து விட்டார்.

ஆனால் இந்த கிராமத்தில் எங்களை வரவேற்று எங்களுக்காகவே கோயிலை திறந்து \
பெருமாளுக்கு உச்சி கால பூஜையையும் மிகவும் பொறுமையாக செய்தார் குருக்கள்
பாஸ்கராசார்யுலு.  வெகு நாட்களுக்கு பின்பு அஷ்டோத்தரத்தில் உள்ள பகவானது 108 நாமங்களையும் கேட்க முடிந்தது...

வேப்பனப்பள்ளி ராமர் கோயில் மிகவும் சிறியது தான். இப்போது தான் சிறு சிறு வேலைகள் செய்து கோயிலை சற்றே பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள்.  இந்த கோயில் மிகவும் சிறிதானாலும் எனக்கு மிகவும் பிடித்த கோயில்களில் ஒன்று.  இங்குள்ள ராமர் ஒரு புறம் சீதையையும் மற்றொரு புறம் தம்பி இலக்ஷ்மணரையும் கொண்டு ஆஞ்சநேயரால் சேவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார். முதன் முதல் இந்த ராமரை பார்க்கும் போதே எனக்குள் ஒரு ஈடுபாடு வந்து விட்டது.. அது முதல் எப்போது கிருஷ்ணகிரி அல்லது ஹோசூர் செல்லும் போதும் ராமரை தரிசனம் செயாமல் போனது இல்லை. எனக்கு அவர் மேல் உள்ள ஈடு பாட்டை ராமர் அங்கீகரிக்கும் விதமாகவே போன வருடம் ராஜு மாமா மூலமாக எனக்கு வேப்பன பள்ளியில் இருப்பது போலவே ஒரு விக்ரகம் தினசரி பூஜைக்காக கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.  வீட்டில் தினசரி ராமர் பூஜை செய்யும் போதெல்லாம் வேப்பன பள்ளி ராமர் கோயிலையும் ராஜு மாமாவையும் நினைக்காமல் இருக்க முடியாது.
                                                        வேப்பனபள்ளி ராமர் கோவில்

நாங்கள் கோயிலில் ராமரோடும் குருக்களோடும் அளவளாவிக்கொண்டு இருக்கும் போது கோயிலின் தர்ம கர்த்தா வந்தார்.  அவர் மூலமாக இந்த கோயில் சுமார் 450 வருடங்களாக அங்கு இருக்கிறது என்றும் அங்குள்ள ராமர் மற்றும் மற்ற விக்ரகங்கள் இரத்தின கிரியில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டோம்.   ஒரே ஒரு குறை, இந்த முறை ராமர் முகத்தை நன்றாக பார்க்க முடியாதது தான்.  முன் எப்போதும் போல இல்லாமல் இப்போது ராமர் முகத்தில் மிகப்பெரிய நாமத்தை சாற்றியிருக்கிறார்கள்.  ஆனால் ராமர் எங்களை நிச்சயம் பார்த்திருப்பார் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து கிளம்பினோம்.


                                       சீதா, ராமர், லக்ஷ்மணர் , மற்றும் ஆஞ்சநேயர்



                                                     ராம நாமமா, இல்லை நாம ராமரா?


                                                                கருடாழ்வார்


ராமர் கோயில் துளசி தீர்த்தம் எங்கள் பசியை மேலும் கிளப்பி விட்டது.  மதிய உணவை கிருஷ்ணகிரியில் முடிக்கும் முன்பாக கிருஷ்ணகிரியில் எங்கள் பாட்டி  இருந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாளம்மன் ( கிராம தேவதை ) கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தோம்.
                                                       அருள்மிகு பட்டாளம்மன்



 நாங்கள் சென்ற பாதை எல்லாம் புற வழியாகவே ( bye-pass)  இருந்ததால் தரமான ஹோட்டல் கிடைக்க வில்லை.  எனவே கிருஷ்ணகிரி ஊருக்கு உள்ளே சென்று ஆரிய பவன் ஹோட்டலில் மதிய உணவு கொண்டோம். 35 ரூபாய்க்கு தயிருடன் கூடிய அருமையான சாப்பாடு.  சாப்பிட்டு வெளியே வரும்போது மணி 2.45.

விரிஞ்சிபுரம்


அங்கிருந்து சென்னை சாலையில் பயணப்பட்டு 4.30 க்கு விரிஞ்சிபுரம் வந்து சேர்ந்தோம்.
விரிஞ்சிபுரம் என்னுடைய சொந்த ஊர்.  சொந்த ஊர் என்றால் நிலம் புலம் வீடு இருக்கிறது  அல்லது இருந்தது என்று அர்த்தம் இல்லை.  என்னுடைய பெயரில் (இனிஷியல் ) விரிஞ்சிபுரம் இருக்கிறது. அவ்வளவுதான்.

விரிஞ்சிபுரம் கோயிலும் மிகவும் பழமையானது 1000  வருடங்களுக்கும் முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.  பிரம்மாவின் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் இது என்று ஸ்தல புராணம் கூறுகிறது. பிரம்மாவுக்கு விரிஞ்சி என்று ஒரு பெயர் உண்டு.  எனவே தான் இந்த இடம் விரிஞ்சிபுரம் என்று அழைக்கப்படுகிறது.  இங்குள்ள சிவனுக்கு மார்கபந்து (
வழித்துணை நாதர் ) என்று பெயர்.  அம்பாள் மரகதாம்பாள்.

                                                      மார்கபந்தீஸ்வரர் ஆலயம்


திரு அண்ணாமலையில் அடிமுடி காணமுடியாமல் தோல்வியுற்றார்.  சிவனின் முடியில் இருந்து விழுந்த ஒரு தாழம்பூவை சாட்சியாக கொண்டு முடியை கண்டதாக பொய் கூற சிவன் அவரை தேவ ரூபத்தில் காட்சி அளிக்கக் கூடாது என்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்து கோயிலில் உள்ள குருக்களுக்கு மகனாக தேவ சர்மன் என்ற பெயருடன் பிறக்குமாறும் சாபமிட்டார்.   அவனது சிறுவயதிலேயே அவன் தந்தை காலமாகி விட உபநயனம் கூட செய்யப்படாத சிறுவனுக்கு பூஜை செய்ய உரிமை இல்லை என்று உறவினர்கள் கூறி அவனது உரிமையை பறிக்க எண்ணினார்கள். அப்போது சிவ பெருமான் ஒரு வயோதிகர் ரூபத்தில் தோன்றி சிறுவனுக்கு பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து உபநயனம்,  பிரம்மோபதேசம், சிவ தீட்சை எல்லாம் செய்வித்து அவ்விடத்திலேயே மகாலிங்கமாக மறைந்தார்.  அன்று பூஜை செய்ய உள்ளே சென்ற சிறுவன் மகாலிங்கத்துக்கு தீர்த்தாபிஷேகம் செய்ய எண்ணினார்.  அப்போது மகாலிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனாகிய பிரம்மா " ஐயனே உமது முடி எனக்கு எட்ட வில்லை " என்று கூறினார். அன்று திரு அண்ணாமலையில் முடியை கண்டதாக பொய் கூறி சாபம் பெற்ற பிரம்மா இன்று முடி எட்ட வில்லை என்று ஒப்புக்கொண்டதால் சாப விமோசனம் அடைந்தார்.   சிவ பெருமானும் சிறுவனுக்கு எட்டும் வகையில் தனது தலையை சற்றே சாய்த்து அவருக்கு அருள் பாலித்தார்.  இன்றும் தலையை சற்றே சாய்த்த வண்ணமே இங்குள்ள மார்கபந்தீஸ்வரர் இருக்கிறார். இது தான் ஸ்தல வரலாறு.

                                                              சிம்ம தீர்த்தம்

கோயிலுக்கு இரண்டு  மாதங்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடை பெற்றது.  இப்போது மதில்களும், பிராகாரங்களும் நன்றாக செப்பனிடப்பட்டு, சிற்ப வேலைப்பாடு மிக்க தூண்களோடு அழகாக காட்சி அளிக்கிறது.

இக்கோயிலின் சிறப்புகள் பின் வருமாறு.

1) சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில்.
2) புராண வாக்குகளின் படி கௌரி, விஷ்ணு, பிரம்மா ஆகிய தெய்வங்களாலேயே பூஜிக்கப்பட்ட திருத்தலம்.
3) அப்பர், சம்பந்தர், திருமூலர், அருணகிரி நாதர், அப்பைய தீட்சிதர், பட்டினத்தார் ஆகியோரால் பாடப்பெற்ற ஸ்தலம்.
                                              வழித்துணை நாதர் மேல் திருமூலர் பாடல்

                                                           திருப்புகழில் விரிஞ்சிபுரம்

4) அருணாச்சல புராணம், சிவ ரகசியம், பிரம்மாண்ட புராணம் ஆகிய புராணங்களில் விவரிக்கப்பட்ட பெருமை உடைய ஸ்தலம்.
5) ஆதி சங்கரரால் பீஜாக்ஷர பிரதிஷ்டை செய்யப்பட்ட சிம்ம தீர்த்தம்
                                                     பிரமன் குளித்த சிம்ம தீர்த்தம்
.
6) திருவாரூர் தேர் அழகு, திரு விரிஞ்சி மதில் அழகு என்று பெயர் பெற்றது.
                                                        விரிஞ்சி மதில் அழகு


7) கஜப்ருஷ்டம் வடிவில் அமைந்த கருவறை.  108. 1008 சிவலிங்கங்கள் ( சகஸ்ர லிங்கம் )
8) அழகிய சிற்பங்கள் அடங்கிய தூண்களை கொண்ட மண்டபங்கள்.




நாங்கள் கோயில் சாயரட்சை பூஜைக்காக திறக்கும் சமயத்திலேயே சென்றதால் கூட்டமும் குறைவாக இருந்தது, குருக்களும் ஒருவர் தான் இருந்தார்.  எனவே மற்ற சன்னதிகளில் தரிசனம் மட்டுமே செய்ய முடிந்தது.

கோயிலின் வெளி பிரகாரத்தில் மட்டுமே புகை படம் எடுக்க அனுமதிக்கிறார்கள்.  மிகவும் அமைதியாகவும், மன நிறைவாகவும் அமைந்தது எங்கள் தரிசனம்,
                                                கோயில் ராஜ கோபுரம் வெளியே

                                                      குருவுடன் கோயில் வெளியே


மாலை 6.30 க்கு எங்கள் தரிசனம் முடிந்து விரிஞ்சிபுரத்தில் இருந்து கிளம்பினோம்.  வரும் வழியில் ரத்தினகிரி கோயிலுக்கு செல்ல நினைத்து , நேரமின்மை காரணமாக நேராக சென்னை நோக்கி புறப்பட்டோம்.

பூந்தமல்லி, போரூர் போக்குவரத்து அதிகமாக இருந்தும், இரவு 8.30 க்கு எல்லாம் வீடு வந்து சேர்ந்தோம்.  மிகவும், பழமையான, அமைதியான கோயில்களில், மன நிறைவான தரிசனத்தின் காரணமாக 590 km பயணம் சென்றது ஒரு பொருட்டாகவோ களைப்பாகவோ தெரியவில்லை.

எங்களது அடுத்த கோயில் பயணம் எங்கு எப்போது என்பது அந்த பரமசிவனுக்கும், ராஜு மாமாவுக்குமே வெளிச்சம்.  -----------காத்திருக்கிறேன்......இப்படிக்கு கோபால்

for those who are interested... contact numbers for

Venkatraama gurukkal - Koratti ---09486639564

Basakaacharyulu - Veppana palli ---  09786940678



5 comments:

  1. Felt like i already visited the temple. I had been there around thirupathur and krishnagiri many times but never knew these temple. will visit when i am there next time
    Keep going.. good contribution

    ReplyDelete
  2. HI FRIENDS, HIT LIKE THIS PAGE ON FACEBOOK.
    http://www.facebook.com/TirupatturDistrict

    ReplyDelete
  3. வணக்கம்...

    http://tamilbloggersunit.blogspot.in/2014/01/blog-post_14.html மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... சிறப்பான பகிர்வுக்கு நன்றி...

    தொடர்ந்து பகிர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. உங்கள் எழுத்துக்கள் மூலமாக தரிசித்த பலன் அடைந்து விட்டேன்

    ReplyDelete