Thursday, December 30, 2021

                                                          எங் ''கள்''  தமிழகம்   03-05-1985


சாதியில்லை சமயமில்லை

சண்டைச் சச்சரவில்லை

போதிமரம் எங்களிடம் 

தெருவுக்கு நாலுண்டென

சாதிக்கும் அரசினது

சாதனைதான் என்னேடா?

நாதியற்று நடுத்தெருவில் 

நிற்போரை காப்போமென்று

போதைரசம் புகட்டிவிட்டு 

புதுமைகளை செய்யுதடா! 

சாதிசமயப் பெயராலே 

சண்டை மலிந்து போச்சுதடா!

சாதியேது! சமயமேது!

எதிலுமிங்கு பேதமில்லை!

பாதியிலே சாதியையும்

பணமிருந்தால் மாற்றிடலாம்!

நாதியற்றோர் பெயர்சொல்லி

நியதியெல்லாம் மீறிடலாம்!

நீதியின் பெயராலே

நிதிகள் பல திரட்டிவிட்டு

பாதிக்கு மேல் சாப்பிடலாம்!

மீதிக்கும் யார் வருவார்?

போதிமரம் எங்கேடா?

வேதநெறி எங்கேடா?

போதை தரும் மதுரசமே 

போதி (த) மரம் ஆனதடா!

புகன்றவன் வாய்வழியே 

வருவதெல்லாம் வேதமடா!

சந்தேகம் தீர்ந்ததடா

சாதனை என்னவென்று

நன்றாக புரிந்ததடா

எங் 'கள்' தமிழகத்திலே!

No comments:

Post a Comment